அண்ணா சாலையில் மாணவர்கள் மோதல்: பொதுமக்கள் அச்சம்

புதன், 3 ஆகஸ்ட் 2016 (14:59 IST)
பிற்பகல் 2 மணிக்கு விவேகானந்தர் இல்லத்தில் இருந்து, திரு.வி.க. நகர் நோக்கி சென்ற 38 சி மாநகர பேருந்து, அண்ணா சாலை பெரியார் சிலை அருகே சிம்சன் பேருந்து நிறுத்ததில் நின்றது. அந்த பேருந்தில் சில மாணவர்கள் இருந்தனர். 


 


அதே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறுவதற்காக வேறு சில மாணவர்கள் நின்றிருந்தனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் பேருந்தில் பயணித்த மாணவர்களும், பேருந்தில் ஏற காத்திருந்த மாணவர்களும் அடி- தடியில் இறங்கினார்கள். இந்த மோதலில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பேருந்து கண்ணாடிகளை உடைத்த பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், பிரசாத் (19), ஆறுமுகம் (18), அஜித்குமார் (18), ராஜேஷ் (18), பிரகாஷ் (19), மணிகண்டன் (18), சஞ்சய் (18), ஆருண்ராஜ் (18), இளவரசன் (18) ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். தற்போது அந்த மாணவர்கள் புழல் சிறையில் உள்ளனர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்