திமுக, காங்கிரஸ் மோதலுக்கு காரணம் ஸ்டாலினாம்?

செவ்வாய், 11 அக்டோபர் 2016 (16:59 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க டெல்லியில் இருந்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வந்தார். அவர் வந்து சென்றதில் இருந்து ஆரம்பித்தது திமுக, காங்கிரஸ் இடையே மோதல் போக்கு.


 
 
எதிர் அணியில் உள்ள தலைவரை பார்க்க தமிழகம் வந்த ராகுல் காந்தி, கூட்டணியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவில்லை. தமிழக முதல்வருக்கு ஆதர்வாக இருப்போம் என கூறிவிட்டு சென்றார்.
 
தமிழகத்துக்கு பொறுப்பு அல்லது தற்காலிக முதல்வர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் கூறுகிறார். உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகத்துக்கு தற்காலிக முதல்வர் தேவையில்லை என பேட்டுயளிக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
 
மேலும் பேட்டி ஒன்றில் திமுக, காங்கிரஸ் கூட்டணி என்பது நிரந்தரமான ஒன்றில்லை எனவும், அதே நேரத்தில் காங்கிரஸ் அதிமுக உடனும் கூட்டணி வைத்திருந்ததை சுட்டிக்காட்டுகிறார். அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கைகள் இரு கட்சிகளுக்கு இடையே உள்ள மோதல் மற்றும் உறவின் விரிசலையே காட்டுகிறது.
 
இதற்கு பின்னால் திமுக பொருளாளர் ஸ்டாலினின் காங்கிரஸ் அனுகுமுறை தான் காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே காங்கிரசுடன் கூட்டணி வைப்பதற்கு ஸ்டாலினுக்கு விருப்பமில்லையாம். 41 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.
 
திமுக ஆட்சியமைக்க முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என அப்பொழுதே கட்சியினர் முனுமுனுத்தனர். இதனால் இந்த உள்ளாட்சி தேர்தலின் போது காங்கிரசை கழற்றி விட்டுவிட்டு தமாகாவை கூட்டணியில் சேர்க்கலாம் என கணக்கு போட்டார் ஸ்டாலின்.
 
ஆனால் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஸ்டாலினின் கூட்டணி கணக்கை முறியடித்து திமுக கூட்டணியில் காங்கிரசை மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் இணைத்துக்கொண்டார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீட்டில் மிகவும் குறைவான தொகுதிகளை கொடுத்து காங்கிரஸ் கட்சியை சீண்டி பார்த்தார் ஸ்டாலின்.
 
இதனால் கடுப்பான காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நாங்கள் தேசிய கட்சி எங்களுக்கு இவ்வளவு இடங்கள் போதாது என கூறியுள்ளார். அப்படியானால் நீங்கள் தனித்து போட்டியிடவேண்டியது தானே என நக்கலாக ஸ்டாலின் கூறியதாக கூறப்படுகிறது.
 
இந்த தகவலை ராகுல் காந்தியிடம் திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார். இந்த சம்பவங்கள் தான் காங்கிரசின் தற்போதைய விஸ்வரூபத்திற்கு காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்