காதலை ஏற்காத கல்லூரி மாணவி; கல்லை போட்டு கொன்ற ஒருதலை காதலன்!

புதன், 8 ஜூன் 2022 (11:03 IST)
சேலத்தில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியின் தலையில் கல்லை போட்டு இளைஞர் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முருகேசன் கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள சின்னசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து குடும்பத்துடன் தோட்டத்திலேயே தங்கி விவசாயம் பார்த்து வருகிறார்.

இவரது இளையமகள் ரோஜா அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்த சாமிதுரை என்ற இளைஞன் ரோஜா மீது ஒருதலை காதலாக இருந்துள்ளான். அவனின் காதலுக்கு ரோஜா சம்மதிக்கவில்லை.

அடிக்கடி சாமிதுரை தொல்லை தர அது ரோஜாவின் வீட்டிற்கு தெரியவந்து பின்னர் ஊர் பிரமுகர்கள் சாமிதுரையை கண்டித்துள்ளனர்., இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜா வீட்டில் இல்லாத சமயத்தை நோட்டமிட்டு வீட்டின் பின்புறமாக சென்று ரோஜாவை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு சம்மதிக்காமல் ரோஜா சத்தம் போடவே உடனே ரோஜாவை கீழே தள்ளி கழுத்தில் மிதித்துக் கொண்டு அருகே இருந்த கல்லை எடுத்து ரோஜாவின் தலையில் தாக்கி கொன்றுள்ளார் சாமிதுரை. ரோஜா வீட்டார் ஓடி வர அவர்களை தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தப்பி ஓடிய சாமிதுரையை தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்