நான் சொல்ற வரைக்கும் அமைதியா இருங்க: எம் எல் ஏக்களை தயார் செய்யும் தினகரன்!

புதன், 7 ஜூன் 2017 (12:12 IST)
அதிமுகவில் தற்போது தினகரன் தனக்கென ஒரு அணியை உருவாக்கி விட்டார். இதுவரை தினகரன் பக்கம் 28 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
 
தொடக்கத்தில் தினகரன் பக்கம் இருந்த அமைச்சர்கள் தற்போது அவரை ஒதுக்கி வைப்பதாக இரண்டு முறை அறிவித்துள்ளனர். இதனை இனிமேலும் வளர விடக்கூடாது என்பதற்காகவே அவர்களை மிரட்டும் ஆயுதமாக ஒரு தனி அணியை உருவாக்கியுள்ளார் தினகரன்.
 
இனிமேல் தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் பேசினால் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் நெருக்கடி கொடுப்பது தான் அவரது திட்டம். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அணி தற்போது சற்று கலக்கத்தில் உள்ளதாகவே தகவல்கள் வருகின்றன.
 
ஆட்சியை கலைப்பது நமது இலக்கு இல்லை என்பதும், நாம் வைக்கும் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றும் அளவுக்கு நாம் பலம் பெற வேண்டும் என்பது தான் தினகரனின் திட்டமாம். இந்நிலையில் தன்னை சந்திக்க வந்த ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரிடமும் தினகரன் ஒரு விஷயத்தை தெளிவாக கூறியதாக பேசப்படுகிறது.
 
எந்த சூழ்நிலையிலும் நம்மால் இந்த ஆட்சிக்கு ஆபத்து வந்துடக்கூடாது. நாம் அனைவரும் அதிமுக என்பதையும் யாரும் மறந்துடக் கூடாது. எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்றேன். அதுவரைக்கும் எல்லோரும் அமைதியா இருங்க என தினகரன் கூறியதாக பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்