இளவரசன் மரணம்; உண்மை வெளிவருமா?

வெள்ளி, 5 ஜூலை 2013 (13:23 IST)
FILE
தருமபுரியைச் சேர்ந்த திவ்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் இளவரசன் தண்டவாளம் அருகே மரணம் அடைந்திருப்பது குறித்து ரயில் ஓட்டுநரிடம் விசாரிக்க ரயில்வே காவல்துறை முடிவு செய்துள்ளது.

இளவரசன் உயிரிழந்திருந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற கோவை - மும்பை குர்லா விரைவு ரயிலின் ஓட்டுநரிடம், விசாரணை நடத்துவது, இளவரசன் மரணம் அடைந்திருப்பதில் உள்ள மர்மத்தை விலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இளவரசனின் கைபேசியை வைத்து, இறப்பதற்கு முன்பு, அவரது கைபேசி எங்கெல்லாம் இருந்துள்ளது என்பதை டவர் மூலம் கண்டுபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இளவரசனின் மரணம் செயற்கை மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களின் சந்தேகத்தை, இது போன்ற விசாரணையின் மூலம் தெளிவுபடுத்தலாம்.

தர்மபுரி பகுதியில் இளவரசன் மற்றும் திவ்யாவின் காதல் திருமணத்தால் தலித் மக்கள் மீது வன்னியர்கள் செய்த கொலைவெறித் தாக்குதல்கள் பற்றி அனைவரும் அறிந்ததே. இவர்களின் திருமணத்தால் ஒரு கிராமமே எரிந்து சாம்பலானதை யாரும் மறக்க முடியாது.

நேற்று பிற்பகலில் இளவரசன் ரயில்பாதை அருகில் இறந்து கிடந்தது தற்கொலை என்று பெரும்பாலான ஊடகங்களும், காவல்துறையினரும் கூறி வருவது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தற்கொலை என்பதற்கு எந்த ஒரு தடையமும் இல்லை என்பதே உண்மை. இப்படியிருக்க தற்கொலைதான் என்று ஊடகங்களும், காவல்துறையினரும் கூறுவது உண்மைக்குப் புறப்பானதாக இருக்க வாய்ப்பு உள்ளது.

இளவரசன் திவ்யா திருமணத்தின் போது வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் இளவரசனின் கிராமத்தையே தீக்கிரையாக்கினர், அப்படியிருக்கையில் இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது எப்படி தற்கொலை தான் என்று ஆணித்தரமாக கூற முடியும் என்று அனைவரின் மனதிலும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் உண்மையை கண்டறிய அரசும், நீதித் துறையும், காவல்துறையும் தீவிரமாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் வேண்டுகோலாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்