30 தமிழக மீனவர்கள் இலங்கையிலிருந்து விடுதலை

புதன், 8 மே 2013 (12:30 IST)
PR photo
FILE
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 30 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இன்று மாலை தமிழகம் திரும்புவார்கள்.

காரைக்கால், ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 56 பேர், கடந்த ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் மற்றும் அனுராதபுரம் சிறைகளில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களின் 9 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுவரை தமிழக மீனவர்களின் காவல் நான்கு முறை இலங்கை நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டதையடுத்து, இன்று இலங்கையில் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 30 பேரையும் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அவர்கள் இன்று மாலை 4 மணி அளவில் இந்திய கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இன்று மாலை 7 மணி அளவில் அவர்கள் தமிழக கரையை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்