சங்கக்காராவை நீக்கு: சன் டிவி அலுவலகம் முற்றுகை! மாணவர்கள் கைது!

வியாழன், 4 ஏப்ரல் 2013 (17:24 IST)
FILE
சென்னை சன் டிவி முன்பு இன்று காலை மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சன் ரைசர்ஸ் அணியை ஏலத்தில் எடுத்துள்ள சன் டிவி குழுமம் அதில் சங்கக்காரா என்ற சிங்களவரை கேப்டனாக நியமித்துள்ளது உடனே அவரை நீக்குக என்று மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சன் ரைசர்ஸ் அணியில் சங்கக்காரா தவிர திசரா பிரைரா என்ற இன்னொரு சிங்கள வீரரும் இடம்பெற்றுள்ளார்.

இருவரையும் அணியிலிருந்து நீக்கக்கோரி மாணவர்கள் ஆர்பாட்டம் செய்தனர். சாஸ்தா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன் என்ற மாணவர் தலைமையில் சன் டிவி அலுவலகம் முன்பு திரண்டனர்.

இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டனர்.

மாணவர்களுக்கு அஞ்சி அங்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சன் டிவி அலுவலகத்திற்குள் மாணவர்கள் நுழைந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் போலீசார் மாணவர்களை சுற்றி வளைத்து நின்றனர்.

இந்த போராட்டம் குறித்து மாணவர் பிரபாகரன் கூறியிருப்பதாவது:

சன் டிவிக்கு எதிராக திடீரென இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. ஏற்கனவெ கலாநிதிமாறனுக்கு சங்கக்காராவை நீக்கக்கோரி கடிதம் எழுதினோம், மின்னஞ்சலும் அனுப்பினோம். பத்திரிக்கையாளர்கள் மூலம் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். ஆனால் கலாநிதிமாறனிடமிருந்து எந்த வித பதிலுமில்லை.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதுகிறார் கருணாநிதி ஆனால் பேரனின் அணியில், சன்ரைசர்ஸ் அணியில் சிங்கள வீரர்கள் இடம்பெற்றிருப்பதை அவரால் தடுக்க முடியவில்லை. மாறாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழ் உணர்வைக் காட்டிலும் கருணாநிதிக்கு வியாபார நோக்கம்தான் பெரிதாகிவிட்டது. என்று கூறியுள்ளார் மாணவர் பிரபாகர்ன்.

இந்த ஆர்பாட்டம் காரணமாக நன் டிவி நிறுவனம் அமைந்துள்ள எம்.ஆர்.சி. நகரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்