கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
புதன், 30 மே 2012 (12:30 IST)
தி.மு.க மத்தியில் கூட்டணியில் இருந்தாலும் மத்திய அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடித்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகும் முடிவை எடுக்க தயங்கமாட்டேன்'' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய அக்கட்சித் தலைவர் கருணாநிதி, கடந்த காலத்திலும் மத்தியில் கூட்டணி அரசில் தி.மு.க பங்கேற்றுள்ளது. கூட்டணி அரசில் பங்கேற்றாலும் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவதில் தயக்கம் காட்டியதில்லை.
முடிந்தவரையில் மத்திய அரசை இணங்கவைக்க முயற்சி செய்வோம். மத்திய அரசு உடன்படவில்லை என்றால் நமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காப்பதற்காக அரசிலிருந்து வெளியேறுவோம்.
சாதாரண மனிதனை பாதிக்காத வகையில் மத்திய அரசும், மாநில அரசும் பெட்ரோல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தினார்.