குமாரபாளையத்தில் இன்று பயங்கர விபத்து

வியாழன், 3 நவம்பர் 2011 (09:52 IST)
குமாரபாளையத்தில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது. லாரி மீது பஸ் மோதியதில் 6 பேர் பலியாயினர்; இடிபாடுகளில் சிக்கிய பிணங்கள் போராடி மீட்க்கப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குமாரபாளையத்தில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது பஸ் மோதி விபத்தானது. இதில் 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலத்தில் இருந்து இன்று அதிகாலை கோவை நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது.

பஸ்சை பவானி அம்மாப்பேட்டையை சேர்ந்த பிரதீப் என்பவர் ஓட்டினார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதே போல் சேலத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி கிளீனிங் பவுடர் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.

லாரியை குணசேகரன் என்பவர் ஓட்டினார். குமாரபாளையம் வளையக்காரனூர் செங்காடு அருகே வந்த போது மழை தூறிக்கொண்டு இருந்தது. இதையடுத்து லாரியை டிரைவர் ரோட்டின் இடது புறமாக நிறுத்தினார். தொடர்ந்து லாரியின் முன்பகுதியில் படிந்திருந்த மழைத்துளிகளை துடைத்து கொண்டு இருந்தார்.

அந்த நேரத்தில் கோவை நோக்கி சென்ற அரசு பஸ்சும் அந்த இடம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது மழை தூறலுடன் பனிப்பொழிவும் அதிகமாக இருந்ததால் கண்ணுக்கு எதிரில் யார் நிற்கிறார்கள் என்று கூட தெரியாத அளவுக்கு காணப்பட்டது. பஸ்சை டிரைவர் பிரதீப் வேகமாக ஓட்டி வந்தார்.

அப்போது ரோட்டின் இடது புறமாக நிறுத்தி இருந்த லாரியை கவனிக்காத அவர் லாரி மீது பயங்கரமாக மோதினார். வேகமாக பஸ் வந்ததால் மோதிய வேகத்தில் பஸ்சின் இடது புறம் கிழித்து கொண்டு சென்றது. பஸ் முழுவதும் இடது புறம் உள்ள அனைத்து சீட்டுகளும் தூக்கி வீசப்பட்டது. லாரி பஸ்சுக்குள் சொருகி கொண்டது.

இந்த பயங்கர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்