5ஆம் தேதிக்குள் சமச்சீர் புத்தகம் வழங்க உத்தரவு

வியாழன், 28 ஜூலை 2011 (18:19 IST)
சமச்சீர் கல்வி வழக்கில் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கில் கடந்த 18-ந்தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. வருகிற 22-ந்தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் சமச்சீர் பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சமச்சீர் கல்வி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் ஆகஸ்ட் 2 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்த இறுதி விசாரனை நடைபெற்று வருகின்றது .

இந்நிலையில் ஆகஸ்ட் 2 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க இயலாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது ,இதையடுத்து ஆகஸ்ட் 5 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுவிட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்கிழமை தொடரும். அன்றைய தினம் மாணவர், பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் அர்ஜுனா வாதிடுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்