மீனவர்களுக்கு துப்பாக்கி பாதுகாப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்
செவ்வாய், 21 ஜூன் 2011 (20:09 IST)
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்காக அவர்களுக்கு காவல்துறையின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்கினாலோ அல்லது கைது செய்தாலோ கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்காக அவர்களின் படகுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரை பாதுகாப்புக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.