தமிழக மீனவரை கொடூரமாக கொன்ற இலங்கை கடற்படையினர்
ஞாயிறு, 23 ஜனவரி 2011 (09:44 IST)
நாகை மாவட்டம் புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தமிழக மீனவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனத்தை சேர்ந்த தினகரன் என்பவருக்கு சொந்தமாக படகில் ஜெயக்குமார், செந்தில், ராஜேந்திரன் ஆகிய மீனவர்கள் நேற்று மதியம் கடலுக்கு சென்றுள்ளனர்.
சேது சமுத்திரம் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடம் அருகே நேற்றிரவு மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.
பின்னர் படகில் இருந்த மீன்களை கடலில் கொட்டியும், வலைகளை அறுத்து அட்டூழியம் செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை கடலில் குதிக்கும்படி துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளனர்.
பயத்தில் மீனவர்கள் செந்தில், ராஜேந்திரன் ஆகியோர் கடலில் குதித்துள்ளனர். ஆனால் நீச்சல் தெரியாததால் ஜெயக்குமார் கடலில் குதிக்க மறுத்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படையினர், மீனவர் ஜெயக்குமார் கழுத்தில் கயிற்றை மாட்டி அங்கும் இங்குமாக இழுத்துள்ளனர். இதில் ஜெயக்குமார் கழுத்து இறுதி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து இலங்கை கடற்படையினர் சென்ற பிறகு ஜெயக்குமார் உடலை எடுத்துக் கொண்டு செந்திலும், ராஜேந்திரனும் கரை திரும்பியுள்ளனர். மீனவர் ஜெயக்குமார் உடலை பார்த்த உறவினர்களும், மீனவர்கள் கதறி அழுதனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் கொல்லப்பட்டதை கண்டித்து புஷ்பவனம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் பாண்டியன் கடந்த 12ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பதற்றம் தனிவதற்குள் மீண்டும் தமிழக மீனவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள நிகழ்வு மீனவர்கள் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.