நெற் பயிர்களுக்கு வழங்கப்பட்டதைப்போல விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற பயிர்களுக்கும் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அண்மையில் பெய்த பெருமழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை 8 ஆயிரம் ரூபாய் என்பதை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி கடந்த 20 ஆம் தேதி ஆணை பிறப்பித்திருந்தார்.
மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பிற பாசனப் பயிர்களுக்கும், மானாவாரி பயிர்களுக்கும் நிவாரணத் தொகையை மேலும் அதிகப்படுத்தி வழங்கிட வேண்டுமென விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
அக்கோரிக்கைகளை பரிசீலனை செய்து, நெற்பயிர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்டதுபோல, மற்ற பாசனப் பயிர்களுக்கும் எக்டேர் ஒன்றுக்கு 7,500 ரூபாயாகவும், மானாவாரிப் பயிர்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு 4000 ரூபாயாகவும் நிவாரணத் தொகையை உயர்த்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.