தமிழ்நாட்டில் 2012ஆம் ஆண்டு வரையில் மின்சார பற்றாக்குறை பிரச்சனை தீராது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்வாரியத்தின் செயல்பாடுகள் பற்றி நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனிநபர் மின்சார பயன்பாடு, தேசிய அளவில் இருப்பதைவிட தமிழகத்தில் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இப்போது 11,371 மெகாவாட் மின் உற்பத்திக்கு வசதிகள் இருப்பதாகவும், நடப்பாண்டில் 11,675 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மின் உற்பத்தித் திறன் 11,371 மெகாவாட் இருந்தாலும், 10,443 மெகாவாட் அளவுதான் உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 1200 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை இருக்கும்.
இந்தப் பற்றாக்குறையை தமிழக மின்வாரியம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதைப் பொருத்துதான் மாநிலத்தில் மின்வெட்டு நிலவரம் அமையும்.
2010-11-ம் ஆண்டில் மின்தேவை 12,860 மெகாவாட்டாகவும், மின் உற்பத்தி 11,547 மெகாவாட்டாகவும் இருக்கும். அப்போதும் 1300 மெகாவாட் பற்றாக்குறை இருக்கும்.
இப்போதைய தி.மு.க ஆட்சியின் கடைசி ஆண்டாகவும், சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கக் கூடிய ஆண்டாகவும் இருக்கும் 2011-12-ல் மின்தேவை 14,224 மெகாவாட்டாக இருக்கும் என மின்வாரியம் கணக்கிட்டுள்ளது. அப்போது மின் உற்பத்தி 13,176 மெகாவாட் இருக்கும். எனவே அப்போதும் சுமார் 1100 மெகாவாட் பற்றாக்குறை இருக்கும்.
மின்தேவையை சமாளிக்க புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை, மேட்டூர் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் 1800 மெகாவாட் கிடைக்கும். கூட்டு முயற்சியில் வல்லூர், தூத்துக்குடி, உடன்குடி திட்டங்கள் மூலம் மொத்தம் 4100 மெகாவாட் கிடைக்கும். இதுதவிர கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மின் உற்பத்தி மூலம் 234 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், தடுப்பணைகள் மூலம் 8 திட்டங்களை நிறைவேற்றி 94.5 மெகாவாட் திறனுள்ள நீர் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ உள்ளதாகவும் மின்வாரியம் கூறியுள்ளது. செய்யூரில் 4000 மெகாவாட் திறனுள்ள அதிநவீன மிகப் பெரிய மின் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து, ஆரம்ப கட்ட பணிகள் நடக்கின்றன.
இவை அனைத்தும் நிறைவேறும்போது தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, மிகுதியான நிலையை அடையும் என மின்வாரியம் கூறியுள்ளது.