ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி ஏன்?: சைதை.துரைசாமி விளக்கம்
செவ்வாய், 21 ஏப்ரல் 2009 (14:59 IST)
"சமூகத்தை சீரழிக்கும் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் லஞ்சம் போன்றவற்றை ஒழிக்க நேர்மையான ஐ.ஏ.எஸ், மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளினால் மட்டுமே முடியும். எனவேதான் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி அளித்துவருகிறோம்" என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை.துரைசாமி கூறினார்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் பேனாமுனை அறக்கட்டளை மற்றும் மனிதநேய அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் துவக்கவிழா மற்றும் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இவ்விழாவில் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை தொடங்கிவைத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை.துரைசாமி பேசியதாவது:
பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், நீண்டநாட்களுக்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டும். மனிதநேய சிந்தனை என்பது அனைவருக்கும் அடிப்படை தேவை. இந்த உலகில் நாம் பார்த்தவற்றை, படித்தவற்றை, உணர்ந்தவற்றை, சான்றோர்கள் கூறியிருப்பவற்றை உள்வாங்கிக்கொண்டு, அதன் அடிப்படையில் நாம் வாழ முயற்சிக்க வேண்டும்.
நீ எதுவாக மாற நினைக்கிறாயோ, அதுபோலவே மாறுவாய் என்பதை நன்கு உணர்ந்தவன் நான். உலகில் வாழ்வது குறைவாக இருந்தாலும், நாம் வழங்கியது அதிகமாக இருக்க வேண்டும்.
இந்த சமூகம் அறியாமையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது. அதை மாற்ற முயற்சிக்க வேண்டும் என நினைத்தேன். மாற்றத்தை விரும்புகிறவர்கள் தான் முதலில் மாறவேண்டும். நாம் வாழ்ந்துகாட்டி, மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இந்த கருத்தை உள்வாங்கி, அதன்படி நான் வாழ முயற்சித்து கொண்டிருக்கிறேன்.
எனது 39வது வயதில் 'உணவே மருந்து; மருந்தே உணவு என்ற ஓர் புத்தகத்தை படித்தேன். அதில் 17 பக்கம்தான் வாசித்தேன். ஆரோக்கியம் பற்றிய எனது தேடலுக்கான விடை அதில் கிடைத்தது. இதைதொடர்ந்து, கடந்த 19 ஆண்டுகளாக முறையான உணவுமுறையை நான் பின்பற்றி வருகிறேன். ஆரோக்கியமில்லாதவர்களின் கல்வி, பணம், பதவி, புகழ் போன்ற அனைத்துமே வீண் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வாழ்வின் அடிப்படை தேவை கல்வி. அதுதான் மனித சமூகத்தை வாழவைக்கும். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டும். இதனால் தான், மதுப்பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு ஒரு சவரன் மோதிரம் பரிசு என்று அறிவித்தேன். கடந்த 1983ம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த 26 ஆண்டுகளில் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே என்னிடம் இருந்து மோதிரம் பரிசாக பெற்றுள்ளனர்.
இதுபோன்ற மாற்றங்களை, ஆட்சிப் பணியில் இருக்கும் நேர்மையான அதிகாரிகளால் மட்டுமே கொண்டுவர முடியும். எனவே, அதுபோன்ற நேர்மையான அதிகாரிகளை உருவாக்குவதற்காகத்தான் ஏழை, எளிய மாணவர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து இலவசமாக ஐ.ஏ.எஸ், பயிற்சி அளித்துவருகிறோம். குரூப்-1 தேர்வுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறோம்.
இந்த பயிற்சிகளை பெற்றும் மாணவ, மாணவிகளுக்கு 10 உறுதிமொழிகளை கொடுத்து, அதை வாழ்நாள் மூலம் கடைப்பிடிக்க செய்துவருகிறோம். இதன் மூலம் ஓர் ஆரோக்கியமான சமூகம் மலரும் என்றும் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.