இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதைப்பற்றி இந்திய அரசுக்கு துளி அளவும் கவலையோ, அனுதாபமோ கிடையாது என்பதைத் தமிழக மக்களும், இந்திய மக்களும் என்றாவது ஒருநாள் தெரிந்து கொள்வார்கள் என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர் படுகொலையால், இந்திய அரசின் துரோகத்தால் நெஞ்சைப் பிளக்கும் வேதனை தாக்கும் இந்த நேரத்தில், தமிழர்கள் மனக்காயத்துக்கு மருந்தாகவும், ஆறுதலாகவும் மிக நல்ல செய்தி வந்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளிவிவகாரத்துறை அமைச்சர் டேவிட் மிலிபேண்ட்டும் அண்ணா நினைவுதினமான பிப்ரவரி 3ஆம் தேதி அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தில் சந்தித்து பேசி ஈழத் தமிழர்களைக் காக்க கூட்டு அறிக்கை தந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர்களும், அமெரிக்காவில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமெரிக்க குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமாவை சந்தித்து சிங்கள ராணுவத்தால் கொல்லப்படும் ஈழத் தமிழரைக் காக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர்.
இந்த பின்னணியில்தான், ஏற்கனவே ஈழத் தமிழர்களின் துயரம் குறித்து அனுதாபம் கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இங்கிலாந்து வெளிவிவகாரத்துறை அமைச்சரோடு சேர்ந்து, இக்கூட்டு அறிக்கையை தந்துள்ளார். இந்த கூட்டு அறிக்கையில் இலங்கையில் நடைபெறும் யுத்தத்தால், ஏராளமான தமிழர்கள் கொல்லப்படும் துயரம் குறித்து தாங்கள் மிகுந்த கவலை அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அத்தீவில் உள்ள நீண்ட கால போராட்ட பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவே இருதரப்பினரும் முன்வரவேண்டும். இரு தரப்பும் தாங்களாகவே போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். குறிப்பாக, பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும், புதுக்குடியிருப்பு மருத்துவமனைப் பகுதிகளிலும், ராணுவத் தாக்குதலோ, குண்டு வீச்சோ நடைபெறக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும், மருந்தும் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பதவி ஏற்றவுடன், இன்னொரு வெளிநாட்டு செயலருடன் சேர்ந்து வெளியிட்டுள்ள முதல் அறிக்கையே, ஈழத் தமிழர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக வெளியிடப்பட்டு உள்ள இந்த அறிக்கை இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை வெளிச்சத்தை தருகிறது.
'விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும்' என்பதுதான் இந்திய அரசின் கொடிய நோக்கம். அந்த திட்டத்தை நிறைவேற்றத்தான் இந்திய அரசு ராணுவ உதவிகளை செய்து வருவதோடு போர் நிறுத்தம் கோர முன்வராததும் ஆகும். இந்த போரினால், லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதைப்பற்றி இந்திய அரசுக்கு துளி அளவும் கவலையோ, அனுதாபமோ கிடையாது என்பதைத் தமிழக மக்களும், இந்திய மக்களும் என்றாவது ஒருநாள் தெரிந்து கொள்வார்கள் என்றாலும், அதனை இப்போதே கவனத்தில் கொண்டு வரக்கருதியே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளேன் என்று வைகோ கூறியுள்ளார்.