இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் என்.ஜி.ஓ.சங்கம் பங்கேற்காது என்று அச்சங்கத் தலைவர் சூரியமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக என்.ஜி.ஓ.சங்கத் தலைவர் கோ.சூரியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலர் ஒன்றியம் இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலனுக்காக, அரசு எடுக்கும் முடிவை அப்படியே ஏற்று நடக்கும் இயக்கமாகும். பிப்ரவரி 4ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் என்று, கடந்த மாதம் 31ஆம் தேதி இலங்கைத் தமிழர் நலன் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினமே, அரசின் நிர்வாகப்பணி செய்யும் நாங்கள் அரசு அலுவலர்களுக்கான நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே, இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க எங்களால் முடிவெடுக்க இயலாது என்பதை பதிவு செய்து கொள்கிறோம்" என்று தெரிவித்து உள்ளோம். அதன்படி இந்த வேலை நிறுத்தத்தில் என்.ஜி.ஓ.சங்கம் பங்கேற்காது என்று சூரியமூர்த்தி கூறி உள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க சென்னை மாவட்ட தலைவர் கு.பால்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைத் தமிழர்களின் இன்னலைப்போக்கிட நடைபெறும் இந்த பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து அரசுப்பணியாளர்களும் பங்கேற்க வேண்டும் என அரசுப்பணியாளர் சங்க மாவட்ட மையம் கேட்டுக்கொள்கிறது" என்று கூறியுள்ளார்.