''இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை'' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் முன் முயற்சியில் தமிழகத்தின் அனைத்துத்தரப்பு அமைப்புகளின் மகத்தான பங்கேற்போடு பிப்ரவரி 4ல் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இந்திய- சிங்கள அரசுகளின் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டமேயாகும்.
தமிழகத்திலுள்ள பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதோ, பொது ஒழுங்கு மற்றும் அமைதியைச் சீர்குலைப்பதோ இப்போராட்டத்தின் நோக்கமல்ல. ஆகையால், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் உறுப்பியக்கங்களைச் சார்ந்தவர்களும், ஆதரவு நல்கும் அனைத்து அமைப்புகளைச் சார்ந்தவர்களும் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மருத்துவமனைகளையும் குறி வைத்துச் சரமாரியாக ஏவுகணைகளை வீசி இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தி வரும் சிங்கள இன வெறியர்களின் அரசப் பயங்கரவாதத்தைத் தடுத்திட தமிழர்கள் என்கிற முறையில் நமக்கு தார்மீகக் கடமையுள்ளதை உணர்ந்து, கட்சி அரசியல் மாறுபாடுகளையெல்லாம் கடந்து இப்போராட்டத்தில் முழு மனதோடு பங்கேற்க வேண்டுமென உரிமையோடும், தோழமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய அரசு தமிழக அரசின் வேண்டுகோளையோ தமிழக மக்களின் உணர்வுகளையோ ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இவ்வாறான சூழலில் தான் இத்தகையப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தவிர்க்க முடியாத தேவை எழுந்துள்ளது. இதில் வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பதையும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உறுதிப்படுத்த வேண்டியது எமது கடமையாகும்.
ஆகவே இப்போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி உள்நோக்கம் கற்பிக்கும் முயற்சிகள் நடந்தால் அதனை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அரசு வழக்கமான தனது கடமையை செய்யும் வேளையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான குறிப்பான சில அறிவிப்புகளைச் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததே ஆகும்.
நாளை பிப்ரவரி 4ம் நாள் நாம் நடத்த உள்ள பொது வேலை நிறுத்தம் இந்திய சிங்கள அரசுகளின் கூட்டுச் சதியை முறியடிக்கும் வகையில் வலுவுள்ளதாக அமைய வேண்டும் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.