இலங்கை தமிழர்களை பாதுகாக்க கோரி, சென்னையில் இன்று மாலை நடைபெறும் கறுப்புக்கொடி ஏந்தி மவுன விரத போராட்டத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து அமைப்புகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழனத்தையே அழித்து ஒழிக்கும் வெறிகொண்டு சிங்கள ராணுவம், தமிழ் மக்கள் மீது ஏவுகணையை ஏவியும் குண்டுகள் வீசியும் கொன்று குவித்து வருகிறது. நாளுக்கு நாள் அங்கிருந்து வரும் செய்திகள் நமது நெஞ்சங்களை பிளக்கின்றன.
இந்திய அரசோ போர் நிறுத்தத்தை வலியுறுத்தாமல் காலம் கடத்தும் தந்திரத்தை கையாண்டு சிங்கள அரசுக்கு துணை போகிறது. இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க முன்வரும்படி தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அமைப்புகளையும் அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
இன்று (30ஆம் தேதி) மாலை 4 மணி முதல் 6 மணி வரை சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்பாக கறுப்பு கொடி ஏந்தி மவுனவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இப்போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து தமிழர் அமைப்புகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மகளிர், இளைஞர் மாணவ அமைப்புகள் மற்றும் அனைத்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வேதனையை வெளிப்படுத்த முன்வருமாறு அனைவரையும் வேண்டி கொள்கிறேன் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.