ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்த இளைஞர் மரணம்
வியாழன், 29 ஜனவரி 2009 (13:54 IST)
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், ஈழத் தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் சென்னையில் இன்று காலையில் தீக்குளித்த இளைஞர், மருத்துவமனையில் மரணமடைந்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் (30) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு இன்று காலை 10 லிட்டர் மண்எண்ணெய் கேனுடன் வந்துள்ளார்.
திடீரென, ''ஈழத்தமிழர்களை வாழ்த்தி கோஷமிட்டும், அவர்களை காப்பாற்ற கோரியும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து கோஷமிட்டபடி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.
அங்கு நின்றிருந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமரன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது.
உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி மரணமடைந்தார்.
தீக்குளித்து இறந்த முத்துக்குமரன், சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புலியநல்லூர் என்ற கிராமம் ஆகும். 'பெண்ணே நீ' என்ற மாத இதழில் கணினி தட்டச்சராக பணிபுரிந்து வந்துள்ளார்.