அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கோரி நடைபயணம் செய்ய முயன்றவர்கள் கைது
சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் பணியின்போது அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி, நிவாரணம் கோரி தடையை மீறி நடைபயணம் மேற்கொள்ள முற்பட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் மலைக்கிராம மக்களிடம் அத்துமீறி நடந்துகொண்டனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடக கூட்டு அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து நீதிபதி சதாசிவம் கமிஷன் விசாரணை செய்தது.
webdunia photo
WD
இந்த குழு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களில் 193 பேர்களை மட்டும் விசாரித்து 2003ஆம் ஆண்டு அறிக்கை வழங்கியது. இதில் தமிழகத்தில் 38 நபர்களுக்கும் கர்நாடகாவில் 48 நபர்களுக்கு மட்டும் நிவராண உதவிகள் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வீரப்பன் தேடுதல் பணியில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மொத்தம் 887 பேர் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. இதுதவிர மீதம் 500 பேர் உள்ளதாகவும் மொத்தம் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்கள் 1,387 பேருக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் இதுவரை இவர்களுக்கு எவ்வித நிவாரணங்கள் வழங்கப்படாத காரணத்தால் நேற்று திங்கட்கிழமை சத்தியமங்கலத்தில் நடைபயணம் தொடங்கி 28ஆம் தேதி ஈரோட்டில் நடைபயணத்தை முடிப்பதாக தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து தடையை மீறி நடைபயணம் மேற்கொள்வதாக அறிவித்தனர்.
இதன் காரணமாக நேற்று காலை சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் ஈரோடு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ரத்தினம் தலைமையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி.) சுந்தரராஜன், சுப்பிரமணியம் மற்றும் ஆய்வாளர்கள் மனோகரன், சௌந்திரராஜன், தங்கவேல், ரங்கசாமி மற்றும் பத்துக்மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
நேற்று காலை பத்து மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும் ஸ்ரீவில்லிப்புத்யூர் சட்டமன்ற உறுப்பினர் இராமசாமி தலைமையில் 150 பேர் இந்த நடைபயணம் தொடங்கினர்.
அப்போது தடையை மீறி நடைபயணம் மேற்கொள்ள முயன்ற 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.