தமிழக அரசு தீர்மானத்தை சட்டை செய்வதாக இல்லை மத்திய அரசு: டி.ராஜா
சனி, 24 ஜனவரி 2009 (09:53 IST)
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு சட்டை செய்வதாக இல்லை என்றும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா குற்றம்சாற்றியுள்ளார்.
webdunia photo
WD
"இலங்கை அரசே, இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்து, இந்திய அரசே, போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசை நிர்ப்பந்தம் செய்'' என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலர் எஸ்.எஸ்.தியாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் போர் ஒரு குரூரமான கட்டத்தை அடைந்திருக்கிறது. கிளிநொச்சி, யானையிறவு பகுதிகளை கைப்பற்றியதற்கு பின்னால் முல்லைத் தீவை இலங்கை ராணுவம் முற்றுகையிட்டிருக்கிறது. பல லட்சம் தமிழ் மக்கள் ஒரு சின்ன நிலப்பகுதியில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், விமான தாக்குதல், தரைவழித் தாக்குதல், கடல்வழி தாக்குதல் என இந்த தாக்குதல்கள் எல்லாம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கை போர் இந்த நிலையை எட்டியிருக்கிற போது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சும்மாயிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இலங்கை அரசுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இலங்கை போரில் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்களே பங்கெடுத்து வருகிறார்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாது இந்திய கப்பற்படை இலங்கை கடற்படைக்கு தேவையான ரகசிய தகவல்களை சொல்லி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தை ஆளும் தி.மு.க. அங்கே நடைபெறுவது இனப்படுகொலை என்று தொடர்ந்து கூப்பாடு போடுகிறது. ஒப்பாரி வைக்கிறது. கூக்குரலிடுகிறது. சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மன்மோகன் அரசு சட்டப்பேரவை தீர்மானத்தை சட்டை செய்வதாக இல்லை. அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்றைக்கும் தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை போட்டிருக்கிறார்கள். என்ன, இறுதி வேண்டுகோள். கெஞ்சி வாழ்வதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல. உரிமையோடு வாழ்வதுதான் ஜனநாயகம்.
இலங்கைக்கு கொடுத்து வருகிற அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படி உதவிகள் நிறுத்தவில்லையானால், நாம் அவர்கள் ஆள்வதை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறோம். முல்லைத் தீவு வீழ்வதற்கு முன்னால், அங்கு கிளஸ்டர் குண்டுகள் மழை போல் குவிவதற்கு முன்னால், மக்கள் பிணங்களாக குவிக்கப்படுவதற்கு முன்னால், இந்திய அரசு போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு தொடர்ந்து போராடும். தமிழ் மக்களின் ஒன்று பட்ட போராட்டமாக அது வளரும். இந்திய பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அது நடைபெறும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறோம் என்று ராஜா தெரிவித்தார்.