அந்தியூர் எம்.எல்.ஏ. வீட்டில் திருடிய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை
வெள்ளி, 23 ஜனவரி 2009 (17:31 IST)
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் குருசாமி வீட்டில் திருடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர் எஸ்.எஸ்.குருசாமி. இவரது வீடு அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் வழியில் உள்ளது. இவரது மகன் ஜெயகுமார் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் அந்தியூரில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.குருசாமி மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் ஆகிய இருவர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
கடந்த செவ்வாய்கிழமை சட்டமன்ற கூட்டம் தொடங்கியதையடுத்து ஒரு நாளைக்கு முன்பே சட்டமன்ற உறுப்பினர் குருசாமி, அவரது மனைவி இருவரும் சென்னை சென்றுவிட்டனர். இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்டு மர்ம மனிதர்கள் யாரோ சட்டமன்ற உறுப்பினர் குருசாமி வீட்டிற்குள் புகுந்து தங்கநகை 33 சவரன், ரொக்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இவர்கள் கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்குள் இருந்த தண்ணீர் குழாயை திறந்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் வீட்டிற்குள் இருந்து தண்ணீர் வெளியே ஓடிக்கொண்டிருந்தது. இதை பார்த்த பக்கத்துவீட்டுக்காரர் சட்டமன்ற உறுப்பினர் குருசாமிக்கு தகவல் கொடுத்தனர். உடனே சென்னையில் இருந்து அந்தியூருக்கு விரைந்து வந்தார் குருசாமி. வீட்டிற்குள் சென்று பார்த்தபோதுதான் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து கோவை மாவட்ட காவல்துறை துணை தலைமை ஆய்வாளர் (டி.ஐ.ஜி) சிவணாண்டி கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் திருடிய நபரை பிடிக்க இரண்டு காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி.), நான்கு ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைத்திருப்பதாக கூறினார்.