சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய பாதுகாப்பு திட்டம் ஜனவரி 28ஆம் தேதி முதல் அமல்
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதிய பாதுகாப்புத் திட்டம் வரும் 28ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது என்று தற்காலிக தலைமை நீதிபதி எஸ்.ஜெ.முகோபாத்யா தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு திட்டத்தை தொடங்கி வைத்து தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யா பேசுகையில், உயர் நீதிமன்ற வளாகத்தை பாதுகாக்கவும், வளாகத்துக்குள் வரும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொது மக்கள் ஆகியோரை பாதுகாக்கவும் இந்த பாதுகாப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம் என்றார்.
நீதிபதி முருகேசன் தலைமையிலான பாதுகாப்பு ஆணையத்தின் ஆலோசனைப்படி 7,000 வழக்கறிஞர்கள், ஊழியர்கள், நீதிபதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், ஜனவரி 28ஆம் தேதி முதல் அடையாள அட்டை இல்லாதவர்கள் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வர முடியாது என்றும் அடையாள அட்டை பெறாத வழக்கறிஞர்களுக்கு 2 மாதம் அவகாசம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை அமல்படுத்தும் காவல்துறையினர், வழக்கறிஞர்களிடமும், மற்றவர்களிடமும் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முகோபாத்யா, தீவிரவாதிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 10 பாதைகளில் சட்டக் கல்லூரி பக்கம் உள்ள 2 பாதைகள் நிரந்தரமாக மூடப்படுகின்றன என்றார்.
உயர் நீதிமன்றத்தின் கிழக்கு பாதையை நீதிபதிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்த ராதாகிருஷ்ணன், வடக்கு பாதை வழியாக வாகனங்களில் வரும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் செல்லலாம் என்றும் பகல் 11.30 மணி வரை இந்த பாதை வழியாக உள்ளே போவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதன்பிறகு உயர் நீதிமன்றம் உள்ளே போகவும், வெளியேறவும் அனுமதிக்கப்படும். தமிழ்நாடு பார் கவுன்சில் பாதை வழியே வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றார் ஆணையர் ராதாகிருஷ்ணன்.
ஆவின் கேட் வழியாக வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் வந்து போகலாம் என்றும் இந்த பாதை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் எஸ்பிளனேடு காவல் நிலையம் அருகில் உள்ள பாதை வழியே சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள், சட்டக் கல்லூரி பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை ஆணையர் கூறினார்.