பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என பா.ஜ.க கோரிக்கை வைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நேற்று பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சென்னையன் முன்னிலை வகித்தார். மாநில பொதுசெயலாளர் ஆடிட்டர் ராஜா கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : தாராபுரம், மூலனூர் மற்றும் குண்டடம் உள்ளிட்ட பகுதியில் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் கடைகளில் விற்பனை செய்யப்படும் உரங்கள் தரமின்றி உள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்து தரமான உரங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்கவில்லை. இதற்கு கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதத்தின் விலையை நிர்ணயம் செய்யவேண்டும்.
கோவில்களில் பாதயாத்திரை பக்தர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சீனிவாசன், சிவக்குமார், சதீஸ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.