இதுகுறித்து தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கையில்,
"இலங்கையில் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் இந்த சூழ்நிலையில் பி.சி.சி.ஐ.யின் (இந்திய கிரிக்கெட் வாரியம்) பண ஆதாயத்திற்காக இலங்கைக்கு இந்திய அணி சென்று விளையாடுவது தேவையற்றது. பி.சி.சி.ஐ.யின் நிர்ப்பந்தத்திற்காக, இந்தியா-இலங்கை அணிகள் இலங்கையில் விளையாடுவதற்கு இந்திய அரசு அனுமதி மறுக்காதது தூரதிருஷ்டவசமானது.
மும்பையில் நடந்த தாக்குதலால் பாகிஸ்தானிற்கு இந்திய கிரிக்கெட் அணி செல்லாது என்று அறிவித்தது போல், அதற்கு சமமான இனப் படுகொலையை எதிர்த்து இலங்கைக்கும் இந்திய அணி செல்லக்கூடாது. இந்திய அணியின் இலங்கைப் பயணத்தை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கு பதிலாக கிரிக்கெட் விளையாட்டை பி.சி.சி.ஐ. நடத்த முன்வந்தது தவறு. காயத்தில் உப்பைப் போட்டு தேய்ப்பதற்கு சமமான காரியம் இது. தமிழர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், லாபத்தை கணக்கில் கொள்ளும் பி.சி.சி.ஐ.யின் முடிவு, உலகெங்கும் உள்ள தமிழர்களின் கண்டனத்திற்கு உரியது.
எனவே இலங்கைக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவதையோ, அங்கு செல்லும் அணியை தேர்வு செய்து அறிவிப்பதையோ தடை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.