இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம் என்று தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அதனால் என்னை கைது செய்ய நடவடிக்கை எடுத்தாலும் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
webdunia photo
FILE
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், உடனடியாக இந்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார்.
2வது நாளாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திருமாவளவன் பேசுகையில், தொண்டர்கள் யாரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். நான் மட்டும் இருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த உண்ணாநிலை போராட்டம் தி.மு.க. அரசுக்கு எதிராக நடக்கவில்லை என்று தெரிவித்த திருமாவளவன், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்தினோம். ஆனாலும் போர் நிறுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று திருமாவளவன் குற்றம்சாற்றினார்.
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்த சிவசங்கர் மேனனை அனுப்பியுள்ளதாக கூறப்படுவது இந்திய அரசு நடத்தும் நாடகம் என்று குற்றம்சாற்றிய திருமாவளவன், இதனால் தீர்வு எதுவும் ஏற்படப்போவதில்லை என்றும் இந்திய அரசே நேரடியாக தலையிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம் என்றும் அதனால் என்னை கைது செய்ய நடவடிக்கை எடுத்தாலும் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டாலோ, வேறு நெருக்கடி உண்டானாலோ தொண்டர்கள் அமைதியுடன் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட திருமாவளவன், உணர்ச்சிவசப்பட்டு கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.