காஞ்சிபுரத்தில் வயிற்றுப் போக்கால் பாதிப்பு : அமைச்சர் நேரில் ஆய்வு
ஞாயிறு, 11 ஜனவரி 2009 (18:05 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், வயிற்றுப் போக்கால் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். குறை பிரசவத்தால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதுமையாலும், இதய பாதிப்பாலும் உயிழந்துள்ளனர்.
வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனை, தனியார் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் கூடுதலாக 25 மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகராட்சி குடிநீர் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு குறித்து ஆய்வறிக்கை வந்த பிறகுதான் எதையும் உறுதியுடன் கூறுமுடியும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.