டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 6-வது நாளாக நீடித்து வருகிறது.
டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும், சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ஆம் தேதி நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக, இதர வாகன சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் ஆங்காங்கே, கோடிக்கணக்கில் சரக்குகள் தேங்கியுள்ளன. காய்கறி, மளிகைப் பொருள்கள் மற்றும் உணவுப்பண்டங்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்தியாவசிய பண்டங்களின் விலையும் மிகவும் அதிகரித்துவிட்டது.
சில தினங்களுக்கு முன்பாக, லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக, பெட்ரோல்- டீசல் டேங்கர் லாரிகளும் வேலை நிறுத்தத்தில் குதித்தன. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, பால் மற்றும் தண்ணீர் லாரிகளும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வு மற்றும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக மக்கள் கொதிப்படைந்துள்ளனர். மற்ற மாநிலங்களிலும் இதே பிரச்சனை நிலவுகிறது.
லாரி அதிபர்கள் தங்கள் தொழிலில் கடும் இழப்புகளை சந்தித்து வருவதாகவும், எனவே தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் துணைத் தலைவர் அம்லோக் சிங் பாட்டியா தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் தங்களது போராட்டம் கைவிடப்பட மாட்டாது என்றும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றும் லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.