சட்டங்களை காட்டி மிரட்டுவதை கை‌வி‌ட்டு பே‌ச்சு நட‌த்து‌ங்க‌ள்: ‌ம‌த்‌திய அரசு‌க்கு தா.பாண்டியன் வ‌லியுறு‌த்த‌ல்

சனி, 10 ஜனவரி 2009 (11:09 IST)
வாகன உரிமையாளர்களை எஸ்மா, தேசப் பாதுகாப்பு, தடா என்ற சட்டங்களை காட்டி ம‌த்‌‌திய அரசு மிரட்டுவதை கைவிட்டு, உரிமையாளர்களுடன் பேசி, உடனடி தீர்வுகாண வே‌ண்டு‌ம் எ‌ன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சரக்குகளை நாடெங்கிலும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவரும் லாரி, டிரக்கு உரிமையாளர்கள், எரிபொருள் விலை ஏற்றத்தாலும், அவர்களுக்கு ஒப்பந்தப்படி தரப்பட்டு வரும் கட்டணத் தொகையை மாற்றியமைக்க கேட்டும், மத்திய அரசு, உலகச் சந்தையில் விலை மலிந்து விட்ட பிறகும், உயர்த்தப்பட்ட அநியாய விலைக் கட்டணத்தையே வசூலித்து வருவதும், ஒப்பந்தக் கட்டணத்தை மறு மதிப்பீடு செய்து நிர்ணயிக்கக் கேட்டும் சுயவேலை மறுப்பு என்ற முறையில் வேலை நிறுத்தத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர்.

இதனால், சரக்குப்போக்குவரத்து தடைப்பட்டு, தேக்கமடைந்ததால், காய்கறி பலசரக்குப் பொருட்கள், முன்னிலும் அதிகமாக உயர்ந்து விட்டன. எரிபொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு, பெரும் போக்குவரத்து தொல்லையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு, வாகன உரிமையாளர்களை எஸ்மா, தேசப் பாதுகாப்பு, தடா என்ற சட்டங்களை காட்டி மிரட்டுவதை கைவிட்டு, உரிமையாளர்களுடன் பேசி, உடனடி தீர்வுகாண வற்புறுத்துகிறோம். போராடி வரும் வாகன உரிமையாளர்களுக்கு மக்களும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.