இயல்பு வாழ்க்கை திரும்பிட நடவடிக்கை : ஜெயலலிதா வலியுறுத்தல்
லாரிகள் வேலை நிறுத்தத்தால் தற்போது நிலவும் அசாதாரணமான நெருக்கடி நிலையை உடனடியாகப் போக்கும் வகையில், பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றி, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் இயல்பு நிலை மீண்டும் திரும்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அளவிற்கும், டீசலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அளவிற்கும் மத்திய அரசு குறைத்து அறிவித்த போது, இந்த விலைக் குறைப்பு அறிவிப்பு ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைப்பிற்கு ஏற்றாற்போல் இல்லை. விலையை குறைக்க வேண்டும் என்று நான் 6.12.2008 அன்று அறிக்கை வெளியிட்டேன். தற்போது அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடைய கோரிக்கையில் உள்ள நியாயத்தை மத்திய அரசு உணர்ந்து, அதை நிறைவேற்றி இருந்தால், இன்று இந்தியாவே ஸ்தம்பிக்கும் அளவுக்குப் போராட்டமும் வெடித்து இருக்காது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்காது.
டேங்கர் லாரி உரிமையாளர்களும், எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டும் இது குறித்து மத்திய அரசு கவலைப்படாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தற்போது நிலவும் அசாதாரணமான நெருக்கடி நிலையை உடனடியாகப் போக்கும் வகையில், பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றி, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் இயல்பு நிலை மீண்டும் திரும்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.