லாரி வேலை நிறுத்தத்தால் சேலத்தில் ரூ.200 கோடி இரும்பு தேக்கம்
வெள்ளி, 9 ஜனவரி 2009 (14:06 IST)
லாரிகள் வேலை நிறுத்தத்தால் தினமும் சேலம் இரும்பாலையில் இருந்து ரூ.200 கோடி மதிப்புள்ள இரும்பு பொருட்கள் எடுத்து செல்ல முடியாமல் தேக்கமடைந்துள்ளன.
சேலம் இரும்பாலையில் தயாரிக்கப்படும் இரும்புத்தகடுகள், இதர உற்பத்தி பொருட்கள் தினமும் ரூ.200 கோடி வரை அயல் மாநிலங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. லாரிகள் வேலை நிறுத்தத்தால் இவை தேக்கமடைந்துள்ளது. சுமார் 50 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாமக்கல் மாவட்டத்தில் தேங்கியுள்ளன.
தீவன மூலப் பொருட்கள் வராததால் நாமக்கல்லில் கோழித்தீவன தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
நெய்வேலியில் 150க்கும் மேற்பட்ட லாரிகள் தினமும் என்.எல்.சி.யின் நிலக்கரி கழிவுகளை நாமக்கல், ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்றி செல்லும் பணியில் ஈடுபடுகின்றன.
தினமும் 500 டன் நிலக்கரி கழிவுகள் லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு டன்னின் விலை சுமார் ரூ.1500 ஆகும். லாரிகளின் வேலை நிறுத்தத்தால் தினமும் ரூ.40 லட்சம் நிலக்கரி கழிவுகள் எடுத்து செல்லப்படாமல் உள்ளது.