5வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் அபாயம்
வெள்ளி, 9 ஜனவரி 2009 (14:07 IST)
டேங்கர் லாரிகளும், ஆயில் நிறுவன அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் 2 நாட்களில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் மூடப்படும் அபாயம் ஏற்படும்.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்கக்கோரி லாரி உரிமையாளர்கள் அகில இந்திய அளவில் கடந்த 5 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் முதல் டேங்கர் லாரிகளும் போராட்டத்தில் குதித்தன. லாரிகள் வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் நேற்று முன்தினம் முதல் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது.
இதனிடையே இன்று நள்ளிரவு முதல் பால், தண்ணீர் உட்பட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளும் போராட்டத்தில் குதிக்கின்றன. இதனால் பால் விநியோகமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர் அசோசியேஷன் தலைவர் கண்ணன் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் 3,300 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இதில் 50 விழுக்காட்டிற்கும் மேலானவை நேற்று மூடப்பட்டன. சென்னையில் மட்டும் 150 பெட்ரோல் பங்க்குகள் இருப்பு இல்லாமல் மூடப்பட்டுள்ளன. அதிகாரிகள் போராட்டம் தொடர்ந்தால், இன்று மீதியுள்ள பங்க்குகளும் மூடப்படும் அபாயம் உள்ளது'' என்றார்.
சென்னை மட்டுமின்றி மாவட்டங்களிலும் பெட்ரோல், டீசல் தேடி மக்கள் அவதிப்பட்டனர். பல பங்க்குகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். சில இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
இந்துஸ்தான் பெட்ரோலிய அதிகாரிகள் நேற்றும் குறைந்த அளவில் பணிக்கு வந்திருந்தனர். அங்கிருந்து, சில இடங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் சப்ளை இருந்தது.
போக்குவரத்துக் கழகங்களில் வழக்கமாக 2 நாட்களுக்கு டீசல் சேமித்து வைக்கப்படும். நேற்று முன்தினம் வரையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் சப்ளை செய்யப்பட்டது. நேற்று மூன்றில் ஒரு பங்கு அளவுக்கே டீசல் சப்ளை இருந்தது. இதே நிலை நாளையும் நீடித்தால், அரசுப் பேருந்துகளை இயக்க முடியாது என்று போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று முதல் பேருந்து சர்வீஸ்களை குறைப்பது குறித்தும் அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
லாரி வேலை நிறுத்தம் 5வது நாளாக இன்றும் நீடிக்கிறது. அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுகுமார் கூறுகையில், ''மத்திய அரசு இதுவரையில் பேச்சு நடத்தவில்லை. மாறாக மிரட்டுகிறது. நாங்கள் சிறை செல்லவும் தயார். வட மாநிலங்களில் பால், குடிநீர், உணவு லாரிகள் ஓடவில்லை. எங்களை அழைத்துப் பேசவில்லை என்றால் இன்று நள்ளிரவு முதல் தமிழகத்திலும் அதே நிலை ஏற்படும்'' என்றார்.