திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திருமங்கலத்தில் நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் தான் அரசியல் கட்சியினர் இருக்க வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் ஒட்டிய 9 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளர் கொண்டு வர வேண்டும். அவர்கள் மட்டுமே ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள். குடும்ப அட்டைகள் அனுமதிக்கப்படமாட்டாது.
வாக்குச்சாவடிகளில் இயந்திர துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் தொகுதி முழுவதும் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
33 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்ததாகவும், 65 இடங்கள் பதற்றம் நிறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் ராணுவப்படையினரும், காவல்துறையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள். மொத்தம் 500 துணை ராணுவத்தினரும், 4,700க்கும் மேற்பட்ட காவலர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
வாக்குச்சாவடிகளை கண்காணிக்க வீடியோ படம் எடுக்கும் புகைப்படக்காரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவின் போது கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
திருமங்கலம் தொகுதி ஓட்டுகளை மதுரை மருத்துவக்கல்லூரியில் எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சீத்தாராமன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து ஓட்டு எண்ணப்படும். பகல் 1 மணிக்குள் முழுமையாக முடிவு தெரிந்து விடும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.