சென்னை: தவிர்க்க முடியாத காரணத்தால் திருமங்கலம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு என்னால் செல்ல இயலவில்லை என்று தெரிவித்துள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு முழு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 9.1.2009 அன்று நடைபெற உள்ள திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானின் வெற்றிக்கு விடுதலைச்சிறுத்தைகள் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றனர். தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் செல்ல இயலவில்லை.
எனினும் விடுதலைச்சிறுத்தைகளின் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின்படி, தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் முழுமூச்சாக ஈடுபடுவார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் உழைக்கும் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மக்கள் உள்ளடங்கிய விடுதலைச்சிறுத்தைகளின் கணிசமான வாக்கு வங்கி தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு முழுமையாக பயன்படும் வகையில் எமது களப்பணி அமையும்.
மாற்று தரப்பை சார்ந்தவர்கள் பரப்பும் வீண் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல் தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு விடுதலைச்சிறுத்தைகள் முழு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.