குடியரசுத் தலைவர், பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
சனி, 3 ஜனவரி 2009 (12:39 IST)
சென்னை வர்த்தக மையத்தில் நடக்க உள்ள அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டுக்கு வருகை தரும் குடியரசுத் தலைவர், பிரதமருக்கு என்.எஸ்.ஜி பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் மாநாடு வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்க வரும் 7ஆம் தேதி இரவு பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் 9ஆம் தேதி நிறைவு நாளில் கலந்து கொள்கிறார்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதி, ஆந்திரா முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாநாடு நடத்தும் கூட்டமைப்பினருக்கு சில நாட்களுக்கு முன்பு இ.மெயில் மிரட்டல் வந்தது. அதில், ''மாநாட்டின் போது தாக்குதல் நடத்துவதுதான் எங்கள் அடுத்த இலக்கு' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து உள்துறைச் செயலர் மாலதியிடம் புகார் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சவுதியில் இருந்து இ.மெயில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இ.மெயில் மிரட்டல் அனுப்பியது யார் என்பது குறித்து சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) உதவியுடன், மத்திய உளவுத் துறையான ஐபி, ரா ஆகிய அமைப்புகள் இணைந்து விசாரணை நடத்துகின்றன.
மாநாட்டுக்கு வரும் குடியரசுத் தலைவர், பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க எஸ்.என்.எஸ்.ஜி ஐஜி தலைமையில் 30 வீரர்கள் இன்று சென்னை வருகின்றனர். விழா நடைபெறும் வர்த்தக மையத்தில் 2,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்ட, புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட் கூறுகையில், ''விழா அமைதியான முறையில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன'' என்றார்.