இ.மெயில் மூலம் மோசடி: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
புதன், 31 டிசம்பர் 2008 (17:40 IST)
பரிசு தருவதாக கூறும் இ.மெயில்களை நம்பி பணம் எதுவும் வங்கியில் பொதுமக்கள் யாரும் கட்ட வேண்டாம் என்றும் இதனை உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் சென்னை மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இ.மெயில் ஐ.டி.யை குறிப்பிட்டு அவை பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், விலை உயர்ந்த கார் மற்றும் சில பரிசு பொருட்கள் தர இருப்பதாகவும் குறிப்பிட்டு சைபர்கிரைம் மோசடிகள் அயல்நாடு மற்றும் அவர்களுக்கு துணை போகிறவர்களால் நடக்கிறது. இதை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம்.
குலுக்கலில் பரிசு சீட்டு நடத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக இங்கிலாந்தில் உள்ள வங்கியில் இருந்து பணம் அனுப்ப இருப்பதாகவும் இதற்காக சர்வீஸ்சார்ஜ் 20 விழுக்காடு இங்கிலாந்து பவுண்ட் மதிப்பில் வங்கியில் கட்ட சொல்வார்கள். இதை நம்பி பணம் கட்டினால் உடனே பணத்தை எடுத்து விடுவார்கள்.
பிறகு பலவித காரணங்களை சொல்லி மேலும் மேலும் பேசி பணத்தை அபகரிப்பார்கள். பரிசு பொருள் எதுவும் தர மாட்டார்கள். இப்படிப்பட்ட இ.மெயில்கள் அயல்நாட்டில் இருந்து செயல்படுவதால் அவர்கள் இருக்கும் இடத்தை உடனே அடையாளம் காண்பது அரிதாகி விடுகிறது. பரிசு தருவதாக கூறும் இ.மெயில்களை நம்பி பணம் எதுவும் பாங்கியில் கட்ட வேண்டாம். காவல்துறைக்கு உடனே தகவல் கொடுங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.