பொங்கல் இலவச பொருட்கள்: நாளை தொடங்கி வைக்கிறார் கருணாநிதி
புதன், 31 டிசம்பர் 2008 (12:02 IST)
சர்க்கரைப் பொங்கல் பொருட்கள் அடங்கிய இலவச பைகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி வழங்கி சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.
webdunia photo
FILE
பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக, குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
அதன்படி, சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவையான பச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசிப்பயிறு 100 கிராம், ஏலக்காய் 20 கிராம், முந்திரி, திராட்சை ஆகிய பொருட்களை ஒரு பையில் போட்டு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமாக குடும்ப அட்டைகளுக்கும் இலவச சர்க்கரைப் பொங்கல் பை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் நாளை (1ஆம் தேதி) முதல் 14ஆம் தேதி வரை நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது.
சர்க்கரைப் பொங்கல் பொருட்கள் அடங்கிய இலவச பைகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி வழங்கி தொடங்கி வைக்கிறார். இதற்கானவிழா சென்னை வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிலையம் அருகே நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.