தலைமைத் தேர்தல் அதிகாரி நேரடி பார்வையில் தேர்தல்: ஜெயலலிதா வலியுறுத்தல்
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (16:13 IST)
'திருமங்கலம் தேர்தலும் திடீர் அறிவிப்பும்' என்ற தலைப்பில் கருணாநிதி கூறும்போதே தோல்வி பயத்தில் இந்த தேர்தலை நடத்துவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. தற்போது வன்முறை ஒன்றே வழி என்று அதில் இறங்கிவிட்டார் என்று தெரிவித்துள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, திருமங்கலம் தொகுதியை துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் நேரடி பார்வையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க.வினர் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வருகின்றன. திருமங்கலம் தொகுதி அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களான பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 52 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும்; சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சாமி மற்றும் அவருடன் இருந்த அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீது பொய் வழக்கு போட்டதோடு மட்டும் அல்லாமல், அவர்களை, காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாகவும், இதன் காரணமாக அவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
தங்களது கடமையைச் செய்ய தவறிய காவல்துறை அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மதுரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரை அவரவர் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமங்கலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் காவல்துறை தலைமை இயக்குனரோ வாய்த்திறக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். இதே நிலைமை நீடித்தால் வன்முறையாளர்களுக்கு துணை போகும் காவல்துறை வன்முறை துறையாகவே மாறிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை விட மோசமான சூழ்நிலை தற்போது திருமங்கலம் தொகுதியில் நிலவுகிறது. வன்முறையை மையமாக வைத்து ஆட்சியையும், கட்சியையும் கருணாநிதி நடத்தி வருகிறார்.
"திருமங்கலம் தேர்தலும் திடீர் அறிவிப்பும்' என்ற தலைப்பில் கருணாநிதி கூறும்போதே தோல்வி பயத்தில் இந்த தேர்தலை நடத்துவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. தற்போது வன்முறை ஒன்றே வழி என்று அதில் இறங்கிவிட்டார்.
தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. எனவே இந்திய அரசியல் சட்டத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணை யம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமங்கலம் தொகுதியை துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் நேரடிக் கட்டுப்பாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.