தமிழ் ஈழம் பற்றி பேச தடை கிடையாது : திருமாவளவன்
தமிழ் ஈழம் பற்றி பேச எந்தவித தடையும் கிடையாது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
பெரியாரின் 35-வது நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் நினைவு நாள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், தமிழ் ஈழம் பற்றி பேசுவதற்கு தடை விதித்து விட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், தமிழ் ஈழம் பற்றி பேச எந்தவித தடையும் கிடையாது.
ராஜீவ்காந்தி கூட விடுதலைப்புலிகளை பார்த்து வெறும் 2 ஆயிரம் பொடியன்கள் என்று ஒரு காலத்தில் கூறினார். ஆனால் அவர்களை இந்திய ராணுவத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை. விடுதலைப்புலிகளைப் பற்றி பேசினால், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து ஒரு ஆண்டு சிறையில் அடைப்பார்கள்.
இந்தியாவில் உள்ள எந்த சட்டத்தாலும் ஒரு ஆண்டிற்கு மேல் சிறையில் அடைக்க முடியாது. பிணை இருக்கிறது, 'பரோல்' இருக்கிறது. இதை எல்லாம் நினைத்தாலே துணிச்சல் வந்துவிடும்.
காங்கிரஸ் நண்பர்கள் எனது உருவபொம்மையை தினமும் எரிக்கிறார்கள். இயேசுநாதர் ஒரு முறை தான் உயிர்த்தெழுந்தார், ஆனால் நான் தினமும் உயிர்த்தெழுகிறேன்.
காங்கிரசில் 'தி.மு.க காங்கிரஸ்', 'அ.தி.மு.க காங்கிரஸ்' என இரண்டு வகை உண்டு. அதில் அ.தி.மு.க காங்கிரஸ்' என்னை கைது செய்ய சொல்லி தூண்டி வருகிறது என்று திருமாவளவன் கூறினார்.