கடலூர் மாவட்டம், மங்களூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டப்பேரவையின் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது.
கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதிக்குட்பட்ட இவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மங்களூர் (தனி) சட்டமன்ற தொகுதி உறுப்பினரான செல்வப்பெருந்தகை தனது எம்.எல்.ஏ பதவியை கடந்த மாதம் 11ஆம் தேதி ராஜினாமா செய்ததாகவும், இது குறித்து பேரவை தலைவரிடம் விலகல் கடிதத்தை அவர் அளித்ததாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
அதே தினத்தன்று செல்வப்பெருந்தகை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்ததாகவும், அவர் அக்கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ ஒரு கட்சியிலிருந்து மற்ற கட்சிக்கு மாறினால் அவர் தகுதியிழக்க நேரிடும். இதன்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த செல்வப்பெருந்தகையின் எம்.எல்.ஏ பதவியும் ரத்தாகி விட்டதாகத்தான் அர்த்தம்.
எனவே மங்களூர் தொகுதி காலியாக இருப்பதாக கருதி, அந்த அடிப்படையில் அதற்கான இடைத்தேர்தலை, திருமங்கலம் இடைத் தேர்தலுடன் நடத்த உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) முகோபாத்யாயா, நீதிபதி தனபாலன் ஆகியோரை கொண்ட முதல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா ஆஜராகி, ''செல்வப்பெருந்தகை ராஜினாமா கடிதத்தில் குறைபாடு உள்ளது. இதனால் ராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை' என்றார்.
இதைத் தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், மனுதாரர் தமது கோரிக்கையை அவைத்தலைவரிடம் தான் தெரியப்படுத்த வேண்டும். இந்த மனுவை உரிய காலத்துக்கு முன்பாக இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்வது பொருத்தமாக இராது. மேலும் சட்டப்பேரவையின் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தனர்.