வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் மேலும் 1 வருடம் நீட்டிப்பு: கருணாநிதி!
புதன், 1 அக்டோபர் 2008 (13:54 IST)
அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி, குடியிருந்து வருவோர், அதற்குரிய ஆதாரங்களை அளிக்கும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு உள்ளாட்சி அமைப்புகளின் தீர்மானங்களைப் பெற்று ஆக்கிரமிப்பாளர்களின் தகுதி அடிப்படையில் அவ்வகை ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் 2007 ஜனவரி முதல் ஆறு மாத காலத்திற்குச் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் அதிக அளவில் பொது மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவும், வீட்டுமனைப் பட்டா பெறுவதற்கான பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு அறவே நீக்கப்பட்டு முற்றிலும் இலவசமாகவே வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றும், வீடு கட்டி குடியிருந்து வரும் கால அளவு 10 ஆண்டுகள் என்பது 5 ஆண்டுகளாகக் குறைக்கப்படுமென்றும் சலுகைகள் வழங்கப்பட்டு, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான காலவரையறை படிப்படியாக நீட்டிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு மிகுந்த பயன் அளித்து வரும் இத்திட்டத்தின் காலவரையறை 30-9-2008 அன்று முடிவடைவதைத் தொடர்ந்து, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் வரன்முறைப் படுத்தப்பட வேண்டிய வீட்டுமனை ஆக்கிரமிப்புகள் இன்னமும் எஞ்சியுள்ளதாலும், அப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற தொடர்ந்து வாய்ப்பளிக்கும் நோக்கத்துடனும் இச்சிறப்புத் திட்டத்தினை 1-10-2008 முதல் 30-9-2009 வரை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டார் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.