கர்நாடக லோக்ஆயுக்த நீதிபதி மீதும் நிலமுறைகேடு புகார்

வெள்ளி, 16 செப்டம்பர் 2011 (17:01 IST)
கர்நாடகாவின் புதிய லோக்ஆயுக்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் மீதும் நில முறைகேடு புகார் கூறப்பட்டுள்ளது.

எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது சுரங்க ஊழல் மற்றும் எடியூரப்பா குடும்பத்தினரின் நில ஊழலை வெளிப்படுத்தியவர் கர்நாடக முன்னாள் லோக்ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே.இப்புகார் காரணமாக எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.

இந்நிலையில் சந்தோஷ் ஹெக்டே லோக்ஆயுக்த நீதிபதி பதவியிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அவருக்குப் பின்னர் நீதிபதி சிவராஜ் பாட்டீல் கர்நாடக லோக்ஆயுக்த நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் பாட்டீலுக்கும், அவரது மனைவிக்கும் பெங்களூரில் விதிமுறைகளை மீறி சொத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1982, 1994 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் அந்த சொத்துகள் வாங்கப்பட்டுள்ளதாக ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி பாட்டீல் மறுத்துள்ளார்."நான் எந்த விதியையும் மீறவில்லை. பெங்களூரில் எனது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட சொத்துகளை அவர் திருப்பிக் கொடுக்க உள்ளார்" என பாட்டீல் அந்த தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்