தூக்கு குறித்த தமிழக சட்டசபை தீர்மானம் கட்டுப்படுத்தாது: மத்திய அரசு

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2011 (16:02 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டைனை விதிக்கப்பட்ட பேரறிவாளன, சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூவருக்குமான தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் இவர்கள் 3 பேருக்குமான தூக்குத் தண்டனையை நிறைவேற்ற, 8 வார காலம் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்றார்.

உயர் நீதிமன்றத்தின் முடிவில் நான் குறுக்கிட முடியாது.குடியரசுத் தலைவரால் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே நான் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.

உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் அவைகளின் கருத்தைத் தெரிவிக்கலாம்.அந்த கருத்து இறுதியாக உறுதிப்படுத்தப்படும் வரை அந்த நீதிமன்றங்களின் கருத்து குறித்து நான் எதுவும் தெரிவிக்க முடியாது.உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்புதான் வழங்கியுள்ளது. அதற்கு அரசு பதிலளிக்கும் என குர்ஷித் மேலும் தெரிவித்தார்.


வெப்துனியாவைப் படிக்கவும்