முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை தொடர கேரளா முடிவு
புதன், 22 ஜூன் 2011 (08:56 IST)
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை தொடர கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் உம்மன்சாண்டி, நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப், முல்லைப் பெரியாறு அணைத் திட்ட சிறப்பு அலுவலர்கள், மாநிலங்களுக்கிடையிலான நீர் ஆலோசனைக்குழு, நீர்ப்பாசன இலாகா, வன இலாகா ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கான சிறப்பு வாகனம் வாங்குவது, அணைக்கான போதிய நிதி ஒதுக்குவது, பழைய அணை திட்டத்தை நிறுத்தி வைப்பது, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது உள்பட பல விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தை தொடரலாமா என்பது குறித்து தமிழ்நாடு, கேரளா அதிகாரிகள் 24 முறை கூடி விவாதித்தும் எந்த உடன்பாடும் எட்டப்பட வில்லை. ஆகவே, இரு மாநில மந்திரிகள் மட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தலாம் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.