அணு உலைகள் அமைக்க ஜாய்தாபூர் விவசாயிகள் மீனவர்கள் கடும் எதிர்ப்பு

சனி, 4 டிசம்பர் 2010 (17:10 IST)
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கி மராட்டிய மாநிலம் ஜாய்தாபூரில் அமைக்கப்படவுள்ள அணு உலைகளுக்கு அங்குள்ள விவசாயிகளும், மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் ஆரேவா நிறுவனத்திடமிருந்து முன்றாவது தலைமுறை தொழில்நுட்பத் தயாரிப்பான ஐரோப்பிய அணு உலைகளை வாங்கி, அவைகளை ஜாய்தாபூரில் நிறுவ இந்திய அணு சக்திக் கழகம் முடிவெடுத்துள்ளது. இதற்கான சுற்றுச் சூழல் அனுமதியை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை வழங்கிவிட்டது.

இன்று இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் சர்கோஜி முன்னிலையில் ஆரேவா நிறுவனமும், இந்திய அணு சக்திக் கழகமும் கையெழுத்திடவுள்ளன.

இந்த நிலையில், ஜாய்தாபூரைச் சேர்ந்த விவசாயிகளும், மீனவர்களும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர், அணு உலைகள் அமைவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திரண்டு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

பசுமை அமைதி இயக்கத்தின் தலைவர் லாரி மில்லிவிர்த்தா தலைமையில் போராட்டத்தில் குதித்துள்ள விவசாயிகளும், மீனவர்களும், இத்திட்டம் தங்களது விளை நிலங்களை மட்டுமின்றி, கடல் வாழ் உயரினங்களையும் அழித்துவிடக் கூடியது என்று வாதிட்டுள்ளனர்.

ஜாய்தாபூரில் அணு உலைகள் வந்தால் உள்ளூர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பு கிட்டும் என்றெல்லாம் கூறப்படுவதை மக்கள் நம்புவதாக இல்லை என்று கூறியுள்ள மில்லிவிர்த்தா, தங்கள் நிலங்களுக்கு இழப்பீடாக தரக்கூடிய பணத்திற்காக விவசாயிகளும்ம, மீனவர்களும் போராடவில்லை. இத்திட்டத்தால் தங்களுக்கு கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பை கருத்தில்கொண்டே எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அணு உலைகள் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடம், பூகம்பத்தால் பாதிப்படையக் கூடியதாக இருப்பதால் அந்த ஆபத்தும் சேர்ந்துகொள்கிறது என்று மில்லிவிர்த்தா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்