அணு உலை இழப்பீடு மசோதா அமெரிக்காவுக்கு சாதகமானது அல்ல: மன்மோகன்

புதன், 25 ஆகஸ்ட் 2010 (19:19 IST)
அணு உலை விபத்து இழப்பீடு மசோதா அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்கக் கூடியது அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அணு உலை இழப்பீடு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்த மசோதா அமெரிக்க நலன்களுக்கு சாதகமானது என்று கூறுவது உண்மையல்ல என்றும், வரலாறு அதற்கு தீர்ப்புக் கூறும் என்றும் கூறினார்.

அமெரிக்காவுக்கு சாதகமாக தாம் செயல்படுவதாக குற்றம் சாற்றப்படுவது இது முதல் முறையல்ல என்று சிங் மேலும் தெரிவித்தார்.

அணு சக்தி துறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நமது பயணம், இந்த அணு உலை இழப்பீடு மசோதா மூலம் நிறைவடைந்துள்ளது.

இந்தியா தன்னிச்சையான அணு ஒழுங்குமுறையகத்தைக் கொண்டுள்ளதால்தான், இத்தனை ஆண்டுகளாக அணு விபத்து ஏதும் ஏற்படாதவாறு தடுப்பதில் வெற்றிக்கண்டுள்ளது.

ஆனாலும் நாம் இன்னமும் நமது அணு ஒழுங்குமுறையகத்தை பலப்படுத்த வேண்டும்.அணு பாதுகாப்புதான் நமது பிரதான அக்கறையாகும்.

எரிசக்தி துறையில் மாற்று வழிகளைக் காண இந்தியாவால் முடியாது என்பதால், இந்த மசோதாவை ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று மன்மோகன் மேலும் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்