புதுடெல்லியில் நடக்கும் ஆதாரம் சார்ந்த வளர்ச்சி குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன் இன்று இந்தியா வருகிறார்.
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சேகரித்துள்ள ஆதாரங்களை பான்-கி-மூனிடம் இந்தியா பகிர்ந்து கொள்ளும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கான தனது பயணத்தை நேற்று முடித்துக் கொண்டு இன்று இந்தியா வரும் பான்-கி-மூன், புதுடெல்லியில் இன்று துவங்கி நான்கு நாட்கள் தொடர்ந்து நடக்கும் ஆதாரம் சார்ந்த வளர்ச்சி குறித்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்து சிறப்பு உரையாற்ற உள்ளார்.
இதன் பின்னர் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் அவர் மியான்மர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்தியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளார். இச்சந்திப்பின் போது கடந்தாண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றியும் இருவரும் விவாதிப்பார்கள் என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.