மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 12 காவலர்கள் உள்பட 100 பேர் பலி
வியாழன், 27 நவம்பர் 2008 (14:12 IST)
மும்பையில் நேற்றிரவு அடுத்தடுத்து 9 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே, 11 காவலர்கள் உள்பட 100 பேர் பலியாயினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பையில் பயங்கரவாதிகள் நேற்றிரவு நடத்திய தாக்குதலையடுத்து அங்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே தலைமையிலான அதிரப்படையினர் தாஜ் ஓட்டலுக்கு விரைந்தது. அங்கு பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த 7 அயல்நாட்டினர் உள்பட 15 பேரை மீட்க அதிரடிப்படையினர் முற்பட்டனர்.
அப்போது பயங்கரவாதிகளுக்கும், அதிரடிப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே சுட்டுக் கொல்லப்பட்டார். புல்லட் புரூப் சட்டை அணிந்திருந்த கார்க்கரே, அதையும் மீறி அவரது உடல்களில் குண்டு பாய்ந்து பலியானார்.
இதே போல மெட்ரோ சினிமா தியேட்டரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரி அசோக் காம்தே தலைமையிலான படை சென்றது. அப்போது நடந்த சண்டையில் அசோக் காம்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பை என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட விஜய் சலாஸ்கார் என்ற காவல்துறை அதிகாரியும் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் பலியானார்.
இதேபோல பல்வேறு இடங்களிலும் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 அதிகாரிகள் உள்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.