ஸ்பெக்ட்ரம்: பிரதமரிடம் அமைச்சர் விளக்கம்!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (23:36 IST)
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விஷயத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா புதுடெல்லியில் விளக்கம் அளித்தார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட `ஸ்பெக்ட்ரம்' என்னும் அடுத்த தலைமுறை அலைவரிசை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளது.

மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் தன் மீதான புகார்களை மறுத்த அமைச்சர், அரசின் கொள்கை முடிவின்படிதான் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படுவதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை செவ்வாயன்று ராசா சந்தித்து அதுபற்றிய விவரங்களை விளக்கிக் கூறினார்.

அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான ஏல நடைமுறைகள் குறித்தும் பிரதமரிடம் அமைச்சர் விவரித்தார். பல்வேறு அரசியல் கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று பிரதமரிடம் விளக்கம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடன் இருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்